×

ரூ.8 லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ள சித்து

புதுடெல்லி: பஞ்சாப்பில் மின்வெட்டு பிரச்னை குறித்து முன்னாள் அமைச்சர் சித்து பேசிய நிலையில், அவர் ரூ.8 லட்சம்  மின்கட்டண தொகை செலுத்தாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.  பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். சமீபத்தில், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தனது சொந்த கட்சி அரசையே சித்து கடுமையாக விமர்சித்தார். முதல்வர் சரியான நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் பஞ்சாப்பில் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டு இருக்காது என குற்றம்சாட்டினார்.  இந்நிலையில். தனது வீட்டிற்கு சித்து இதுவரை மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அமிர்தசரசில் உள்ள தனது வீட்டிற்கு அவர் ரூ.8,67,540 தொகை மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி நேற்று முன்தினம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமிர்தசரஸ் மின்வாரிய தலைமை பொறியாளர் கூறுகையில், ‘‘ சித்துவுக்கு எந்த சிறப்பு விதிவிலக்கும் கிடையாது. இது குறித்து விசாரணை செய்யப்படும்,” என்றார்.

Tags : Sidhu , Electricity bill, balance, Sidhu
× RELATED பாஜவிற்கு மீண்டும் தாவுகிறார் சித்து?:...