திருவனந்தபுரம்:லட்சத்தீவில் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா பட்டேல் கொண்டு வந்த கெடுபிடிகளுக்கு எதிராக கடும் எதிராக, லட்சத்தீவை சேர்ந்த நடிகை ஆயிஷா சுல்தானா, ‘கொரோனாவை உயிரி ஆயுதமாக ஒன்றிய அரசும், லட்சத்தீவு நிர்வாக அதிகாரியும் பயன்படுத்துகின்றனர்,’ என்று குற்றம்சாட்டினார். இதற்காக, அவர் மீது போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து செய்யும்படி கேரள உயர் நீதிமன்றத்தில் சுல்தானா தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த வழக்கில் ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது பற்றி அவரிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளது,’ என்று வாதிட்டார். இதை ஏற்ற உயர் நீதிமன்றம், சுல்தானா மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டது.