×

கட்டுப்பாட்டு அறை எண்ணில் புகார் தெரிவிக்கலாம்: பெண்கள், குழந்தைகளிடம் சில்மிஷம் செய்தால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் எஸ்பி எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் எம்.சுதாகர், பொறுப்பேற்ற  நாள் முதல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு உரியமுறையில் பராமரிக்கப்படும். ரவுடிகள் கொட்டம் அடக்கப்படும். குற்றங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்படுவர். பெண்கள், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கந்துவட்டி குறித்து புகார் இருந்தால் தைரியமாக அந்தந்த காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கும் முன்பு அனைவரும் சமம். மேலும், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-044- 27236111, தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண்- 044- 27238001 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.


Tags : Kanchipuram SP, Warning
× RELATED நடப்பு பருவத்திற்கு தேவையான உரம்...