×

குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது


தென்காசி: கடையம் அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. தென்காசி மாவட்டம், கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது மலையடிவார கிராமங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு கருத்தப்பிள்ளையூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த சிகாமணி என்பவரது வீட்டு முன்பு கரடி நடமாடியது. இந்த காட்சியை அவர், தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்ததால் கருத்தப்பிள்ளையூர் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு வைத்தனர். அதன்படி நேற்றிரவு அந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

The post குடியிருப்புக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Kadayam ,Tenkasi District ,Kadayam Western Ghats ,
× RELATED கடையம் சார்பதிவாளரின் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு