×

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!: பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீண்டும் சிறையில் அடைப்பு..விசாரணையை தொடங்க போலீசார் திட்டம்..!!

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கடந்த 17ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். 


பின்னர் விமானம் மூலமாக சென்னை அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள இதய சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 


உடல்நலம் தேரியதை அடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அவர் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக மொத்தம் 3 வழக்குகள் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசாரால் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஒரு வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 வழக்குகளிலும் போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையில் வருகின்ற திங்கள் அல்லது செவ்வாய்கிழமை சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கின்றனர். 



Tags : Sivasankar Baba , Sex, Discharge, Sivashankar Baba, Prison
× RELATED சிவசங்கர் பாபாவிற்கு எதிராக பாலியல்...