×

நாளை மறுதினம் சட்டப்பேரவை கூட்டம் எதிரொலி: தமிழக ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுதினம் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மே மாதம் 11 மற்றும் 12ம் தேதி நடந்தது. 11ம் தேதி கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 12ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. அப்போது, சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதன்முதலாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 21ம் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு சில தினங்களுக்கு முன் அறிவித்தார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், அன்றைய தினம் பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ள அனைத்து உறுப்பினர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பேரவை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு நேற்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். சபாநாயகராக பதவியேற்ற பின் முதல்முறையாக அப்பாவு, தமிழக கவர்னரை நேற்று சந்தித்தார். அவருக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இதைதொடர்ந்து, 21ம் தேதி (திங்கள்) தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது குறித்தும், அன்றைய தினம் தாங்கள் (ஆளுநர்) உரையாற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார். சபாநாயகரின் அழைப்பை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்தது.
ஆளுநரை சந்தித்து பேசியபின் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. சட்டப்பேரவை தொடங்கும் முன் சபாநாயகர் ஆளுநரை சந்தித்து அழைப்பது வழக்கம். அதன்படி அவரை சந்தித்து அழைத்தேன். அவரும் மகிழ்வுடன் வருவதாக ஒப்புதல் அளித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும். முதல் நாளே நாங்கள் சொல்லியிருக்கிறோம், முதல்வரும் சொல்லியிருக்கிறார். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி நேரம் ஒதுக்கப்படும். முதல்வர் அறிவித்த 14 வகை மளிகை பொருட்களை அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களுக்கு கொடுக்க சொல்லி முதல்வர் கூறியுள்ளார். அதே ஜனநாயகம் சட்டப்பேரவையிலும் நடக்கும். எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடக்கும் என்பது குறித்து சட்டப்பேரவை ஆய்வு குழு 21ம் தேதி அன்று கூடி முடிவெடுத்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Speaker ,Appavu ,Governor of Tamil Nadu , Echo of the meeting of the legislature the next day: Speaker Appavu meets the Governor of Tamil Nadu
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...