சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் செயல்படவுள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை, அனைத்து சார்பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பதிவுத்துறை அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் இன்று முதல் 50 சதவீதம் டோக்கன்களுடன் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
* அலுவலக நுழைவு வாயிலில் ஒரு வாஷ்பேசின் அல்லது கை கழுவுமிடம் அமைத்து சோப்பு, தண்ணீர் வைத்து பதிவுக்கு வரும் பொதுமக்களை கைகளை கழுவிய பின்னரே அலுவலகத்திற்குளு் நுழைய அனுமதிக்க வேண்டும். கைகழுவும் வசதி அமைக்கப்படவில்லை எனில் அலுவலக வாயிலில் ஒர மேசையில் சானிடைசரை பொதுமக்கள் பயன்படுத்திய பின்னரே அலுவலகத்திற்குள் வர வேண்டும்.
* அலுவலகத்திற்கு வெளியே எக்காரணத்தை கொண்டும் தேவையின்றி மக்கள் கூடுதவதை தவிர்க்க வேண்டும்.
* பொதுமக்களின் பெயர், தொலைபேசி எண், உள்/வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை தேதி வாரியாக குறிப்பிட்டு தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும்.
* சார்பதிவாளர், உதவியாளர் என அனைவரும் ஒரே இயந்திரங்களை பயன்படுத்தாமல் வெவ்வேற விரல் ரேகை இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
* பொதுமக்களிடம் ரேகை பெறுவதற்கு என தனியே ஒன்று/இரண்டு விரல் ரேகை இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
* பணியாளர்கள் மாஸ்க், கிளவுஸ் அணிந்து பதிவுப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* ஆவண பதிவின்போது புகைப்படம் எடுக்கும்போது மட்டும் பொதுமக்களின் முக கவசங்களை கழற்றி கொள்ளவும், புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாக முககவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும்.
* பாதுகாப்பாக பணிகளை மேற்கொள்ள ஒரு மணி நேரத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் என மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை, 11 மணி முதல் 12 மணி வரை, 12 மணி முதல் 1 மணி வரை, 1 மணி முதல் 1.30 வரை, 1.30 மணி முதல் 2 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கு 10 டோக்கன்கள், 3 மணி முதல் 3.30 மணி வரை 5 டோக்கன்கள். இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
* ஆவணத்தை பதிவுக்கு தாக்கல் செய்பவர் மட்டுமே முதலில் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். பிறகு ஆவணத்தில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
* ஆவணத்தை பொதுமக்களுக்கு ஒரே வருகையில் திருப்பித் தருவதன் மூலம் பொதுமக்கள் மீண்டும் மீண்டும் அலுவலகம் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பகுதிக்கு அறிவுரைகள்
* கட்டுபாட்டு பகுதிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
* சார்பதிவாளர் கட்டுபாட்டு அமைந்து பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் அலுவலகத்தை அதன் அருகில் இருக்குமு் ஓர் அலுவலகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம். டிஐஜி அலுவலகம், மாவட்ட பதிவாளர், அருகே அமைந்த சார்பதிவாளர் அலுவலகம்.
* ஆவணத்தில் சம்பந்தப்பட்ட எந்த நபராவது அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுபாட்டு பகுதிகளை சேர்ந்தவராக இருப்பதின் அந்த ஆவணத்தை பதிவிற்கு பரிசீலிக்க தேவையில்லை. ஆவண பதிவிற்கு முன் கணினி வழி அட்டவணை தரவுகளை பரிசீலிக்கும் போதே இந்த விவரத்தை சார்பதிவாளர் அறிந்து கொண்டு உரிய திருப்புச் சீட்டு வழங்கி பதிவினை நிராகரிக்கலாம்.