திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 29-வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெருவில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை அபிவிருத்தி திட்டத்துக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. பின்னர் பணிகள் முடிந்தும் சாலை சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறியது. இதனால் அவ்வழியே நடமாடும் காய்கறி வாகனங்கள், குடிநீர் லாரிகள் செல்ல முடியாமல் நிலைதடுமாறி வந்தன.
இதையடுத்து திருவள்ளுவர் தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என தொகுதி எம்எல்ஏ மாதவரம் சுதர்சனத்திடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று மாதவரம் உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பிரத்தியேக வாகனங்கள் மூலம் திருவள்ளுவர் தெரு சாலையில் உள்ள மேடுபள்ளங்களை சமன்படுத்தி சீரமைத்தனர். அதன்பின்னர் அனைத்து வாகனங்களும் சீராக சென்று வந்தன. தற்போது தற்காலிகமாக சீரமைக்கப்படும் இதுபோன்ற அனைத்து தெரு சாலைகளும் கொரோனா தடை காலம் முடிந்ததும் முறையாக சீரமைத்து, தரமான சாலைகள் அமைக்கப்படும் என மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தெரிவித்தார்.