சென்னை: சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்துவதை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ.கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்ட அறிக்கை: குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுவரை கண்டிராத மிகக் கடினமான சூழ்நிலையை நாடு கடந்து செல்கிறது. இந்த அபத்தமான நடவடிக்கையால் மத்திய அரசு நாட்டு மக்களை கேலி செய்கிறது. மோடியும், பா.ஜ.க அரசும் நாட்டிற்கு பெரும் சுமையாக மாறிவிட்டனர். இந்த சூழலில் தங்களின் தோல்வியை மறைக்க குடியுரிமை போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களை தூண்டும் மத்திய அரசின் அபத்தமான நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜூன் 1ம் தேதி(நாளை) நாடு தழுவிய பரப்புரையை நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவுச் செய்துள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள வீடுகளில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஏந்தி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.