×

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு

* முன்னாள் மாணவிகள் 900 பேர் புகார்
*பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை, மே 31:  ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும்  பாலியல் தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் 8ம் தேதி செட்டிநாடு  வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக குழந்தைகள்  உரிமை, பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில்  பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தொடர்ந்து  புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதன்படி ஏற்கனவே கே.கே நகர் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் டிவிட்டரில் புகார் அளித்தனர்.
 
அதன்படி அந்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து மஹரிஷி வித்யா மந்திர், செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான புகார்களும் கொடுக்கப்பட்டு அவைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார்கள் வந்தது.

ஆனால் அந்த புகார் மீது பள்ளி நிர்வாகம் இதுவரை எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அதனால் முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர்கள் கையெழுத்திட்டு தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் புகாராக அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வரும் 8ம் தேதி அந்த பள்ளியில் பணியாற்றக் கூடிய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அந்த மனுவில் பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. புகார்கள் அளித்தும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு ஆசிரியரையோ, பள்ளி அலுவலரையோ விசாரிக்கவில்லை. மேலும் பழைய புகார்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் புகார் கடிதம்  அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chettinad Vidyashram School ,Raja Annamalaipuram , Sexual harassment of students at Chettinad Vidyashram School in Raja Annamalaipuram
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...