×

சென்னையில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக 900 பேர் கூட்டாக புகார்

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக புகார் அளித்துள்ளனர். முன்னாள் மாணவர்களின் புகார் பற்றி தமிழ்நாடு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 8ம் தேதி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னையில் தொடர்ச்சியாக பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கேகே நகர் பள்ளியில் ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக பல்வேறு பள்ளிகளின் மீதான புகார்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே மஹரிஷி வித்யாமந்திர், செயின்ட் ஜார்ஜ் பள்ளி மீதான புகார்களும் கொடுக்கப்பட்டு அவைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகள் இதுபோன்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் இதுகுறித்து ஒரு புகார் கூட இதுவரை விசாரிக்கப்படவில்லை என்றும் முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் புகாராக கையெழுத்திட்டு மாநில குழந்தைகள் நல உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு புகாராக அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வரும் 8ம் தேதி அந்த பள்ளியில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. தொடர்ச்சியாக புகார்கள் அளித்தும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்தவொரு ஆசிரியரையோ அல்லது ஆசிரியர் அல்லாத பள்ளி அலுவலரையோ விசாரிக்கவில்லை என்பது மாணவிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுள்ள பழைய புகார்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் மாணவர்கள் 900க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகாராக மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் அனுப்பியுள்ளனர்.



Tags : Setinadam Vidyashram School ,Chennai , school, case
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்