நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரயில் லோகோ பைலட்டாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டோபின் மடாதில் (27), வழக்கம்போல் நியூயார்க் நகரில் ரயிலை இயக்கி கொண்டிருந்தார். இவரது ரயில் அங்குள்ள சுரங்க ரயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஒருவரை அருகிலிருந்த மற்றொருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில் வரும் திசையைப் பார்த்து கைகளை அசைத்து ரயிலை நிறுத்தும்படி சைகை காட்டினர். இதனை கவனித்த டோபின் மடாதில், சாதுர்யமாக செயல்பட்டு அவசரகால பிரேக் மூலம் ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
இதனால் தண்டவாளத்தில் விழுந்த நபரிடம் இருந்து 30 அடி தூரத்தில் ரயில் நின்றதால், கீழே விழுந்தவரின் உயிர் தப்பியது. எனினும் தண்டவாளத்தில் விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றியதற்காக டோபின் மடாதிலை பலரும் பாராட்டினர். போலீஸ் விசாரணையில், தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.