ஆவடி: தமிழகத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு துறை நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் குடும்பத்தினர் தடுப்பூசி போட்டு கொள்ள சிறப்பு முகாம் ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை நேற்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வரின் ஆணைக்கிணங்க, தொற்று பரவலை ஏற்படுத்தும் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் மாவட்டம் முழுவதும் தினமும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சுகாதார துறை ஊழியர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக, வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பொது மருத்துவமனைகளிலும், சிறப்பு மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பாதுகாப்பு துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள், குடும்பத்தினர் சுமார் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம், ஒரு வார காலத்திற்கு, ஆவடி டேங்க் பேக்டரி குடியிருப்பு வளாகத்தில் செயல்படும். இதனை பயன்படுத்தி, பாதுகாப்பு துறையினர், குடும்பத்தினர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியின் போது, மாநகராட்சி ஆணையர் நாராயணன், நகர் நல அலுவலர் முகம்மது ஹசின், மாநகராட்சி சுகாதார அலுவலர் ஜாபர் உள்பட அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.