×

தனி உரிமைக்கு ஆபத்து!: மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வாட்ஸ் ஆப் நிறுவனம்..!!

டெல்லி: மத்திய அரசின் புதிய விதிகள் பயனர்களின் தனி உரிமைக்கு எதிராக இருப்பதாக கூறி  வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.  ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர்  மற்றும் யூ - டியூப்  ஆகிய சமூக வலைத்தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரியில் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இதனை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. 


இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தகவலை முதலில் வெளியிடுபவர் குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்பதாகவும், இது அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமைக்கு எதிரானது என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. தகவல்களின் தடத்தை கண்டறிய முயன்றது, தனியார் நிறுவனங்கள் பயனர்களின் தரவுகளை திரட்ட வழிவகுக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஒழுங்கு விதிகளுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் கோரியுள்ளது. இவ்வழக்கு மத்திய அரசிற்கும், சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலை வெளிப்படுத்துவதாக ராய்ஜஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 



Tags : WhatsApp ,Delhi High Court , Privacy, Federal Government, Ordinance, Delhi High Court, WhatsApp
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...