சென்னை: பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்தது. இது தொடர்பாக நடைபெறும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வருகிறது.
இந்த சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகள் குறித்த தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை பள்ளி கல்லூரிகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதனை உறுதிப்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
கே.கே.நகர் பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை செய்து 3 நாட்களுக்குள் முழு அறிக்கையை அனுப்புமாறு தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.