புதுடெல்லி: இந்திய மக்களுக்கு போடப்பட்டுள்ளதை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஐநாவில் இந்தியா கூறும் வீடியோ காட்சியை வெளியிட்டு திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் யஸ்வந்த் சின்கா கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை அதில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திரிணாமுல் காங். மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தனது டிவிட்டரில், ஐநாவில் இந்தியாவின் பிரதிநிதி பேசும் வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார். 10 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் பேசும் இந்திய பிரதிநிதி, இந்தியா, தனது நாட்டு சொந்த மக்களுக்கு வழங்கியதை காட்டிலும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். இதனை விமர்சித்துள்ள யஷ்வந்த் சின்கா, ‘‘பிரதமர் மோடி உண்மையில் உலக தலைவர் தான். இந்தியர்கள் அனைவரும் நரகத்துக்கு செல்லுங்கள்” என பதிவிட்டுள்ளார்.