×

பள்ளிக்கரணையில் பரபரப்பு; அடுத்தடுத்து 2 பைக் மீது கார் மோதி பெண் பலி: 3 பேர் படுகாயம்; இளம்பெண் கைது

வேளச்சேரி: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஷிம்ரெயோ ஜிமிக்கி (40). இவர், வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை, கன்னிகாபுரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். ஆழ்வார்பேட்டையில் உள்ள அழகு நிலையத்தில் முடிதிருத்துபவராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இவர் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி பிரதான சாலை வழியே பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மயிலை பாலாஜி நகர் சிக்னல் அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் இவர் பைக் மீது வேகமாக மோதியது. பின்னர், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், 3 பேர் சென்ற மற்றொரு பைக்மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஷிம்ரெயோ ஜிமிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

மற்றொரு பைக்கில் வந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த ராஜா (26), அவரது நண்பர்கள் சிவா (25), முரளி (27) ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஷிம்ரெயோ ஜிமிக்கியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த மணலி புதுநகரை சேர்ந்த மேரி சோபியா (26) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post பள்ளிக்கரணையில் பரபரப்பு; அடுத்தடுத்து 2 பைக் மீது கார் மோதி பெண் பலி: 3 பேர் படுகாயம்; இளம்பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Velachery ,Shimreo Jimiki ,Manipur ,Velachery-Thambaram ,Kanikapuram ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!