சென்னை: தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் நாள்தோறும் அரசுக்கு ரூ.90 கோடி வரையில் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, வெயில் காலங்களில் கூலிங் பீர் விற்பனை அமோகமாக நடைபெறும். 20 பீர் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படும் கடைகளில் 50 பெட்டிகள் வரை நாள்தோறும் இறக்குமதி செய்யப்படும். ஆனால் இப்போது கொரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் விற்பனை சரிந்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த விற்பனையில் 20 சதவீதம் மட்டும் தான் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விற்பனை சரிவின் காரணமாக கடைகளுக்கு கொண்டுசெல்லப்படும் பீர் பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதாவது, கடைகள் தோறும் 5 முதல் 10 பெட்டிகள் வரை மட்டுமே கொண்டுசெல்லப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் கூலிங் பீர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும். நாள்தோறும் ரூ.50 கோடி வரையில் பீர் விற்பனை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பயத்தால் தினமும் பீர் விற்பனை ரூ.10 கோடியாக குறைந்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.