பல்லியா: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதியில் கியான்வாபி மசூதி அமைக்கப்பட்டதாக ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர். இதனை இஸ்லாமிய அமைப்புக்கள் மறுத்துள்ளன. கியான்வாபி மசூதியை ஆய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அதன் அருகில் இருக்கும் கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுதுறை சார்பில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக பைரியா பாஜ எம்எல்ஏ சுரேந்திர சிங் அளித்த பேட்டியில், ‘‘வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். கியான்வாபி மசூதி அகற்றப்படும். மிகப்ெபரிய சிவன் கோயில் கட்டப்படும்.
இது மாற்றம் மற்றும் இந்துக்களின் அதிகாரத்துக்கான சகாப்தம். ராம ராஜ்ஜியத்தை அமைப்பதில் உள்ளதை போன்றே இதிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன. இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும். நாடு விரைவில் இந்து ராஷ்டிராவாக மாறும். பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் இந்த கனவு நிறைவேறும்” என்றார். அகழ்வாராய்ச்சி செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் பாஜ எம்எல்ஏவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.