×

நாங்குநேரி பகுதியில் கொட்டப்படும் கான்கிரீட் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி பகுதியில் கொட்டப்படும் கான்கிரீட் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாங்குநேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரட்டை ரயில்பாதை பணிகள் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகளுக்காக தனியார் நிறுவனங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் ரெடிமேட் கான்கிரீட் கலவைகள் வாங்கப்படுகின்றன. தேவையான இடத்தில் காங்கிரீட் கலவைகளை கொண்டு சேர்த்த பின் மீதமுள்ள தேவையற்ற கான்கிரீட் கழிவுகளை தனியார் நிறுவன ஊழியர்கள், வயல்வெளிகள், தரிசு நிலங்கள், நெடுஞ்சாலை ஓரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிச் செல்கின்றனர்.

இதனால் அந்த இடத்தில் சுமார் 10 மீட்டர் சுற்றளவுக்குக் கான்கிரீட் கழிவுகள் படர்ந்து மண்ணின் மேற்பரப்பை மூடி விடுகின்றன. அங்கு புல் பூண்டு எதுவும் முளைப்பதில்லை. மேலும் மழை பெய்யும் போது நிலத்தடி நீர் பூமிக்குள் செல்வதும் தடுக்கப்படுகிறது. ஆகவே சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க கான்கிரீட் கழிவுகளைக் கொண்டு வரும் தனியார் நிறுவன ஊழியர்களை கண்காணித்து கண்ட இடங்களில் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nanguneri , Environmental impact due to concrete waste dumped in the Nanguneri area
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...