சென்னை: சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி, நீதிபதி முன்பு பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாசர்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மீது கடந்த 2000ல் தொடரப்பட்ட கொலை வழக்கில் ஆயுள் கைதியாக புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு இவர் ஆஜர்படுத்தபட்டார்.
அப்போது, சிறையில் தன்னை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைபடுத்துவதாகவும், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாகவும் கூறிய அவர், கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால், நீதிபதி முன்பே திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். மேலும், இது தொடர்பாக தான் கடிதம் எழுதி தருவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.
இதைப் பார்த்த நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் அங்கிருந்த போலீசாரும் அதிர்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனz. அங்கு அவருக்கு 14 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரது வக்கீல் பி.சங்கர் கூறுகையில், ‘புழல் சிறையில் உள்ள உயர் அதிகாரிகள், பாண்டியனை தண்டனை சிறையில் இருந்து மாற்றம் செய்து மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் செல்லில் அடைத்துள்ளனர். சிறையில் பாண்டியன் வேலைபார்த்ததற்கான சம்பளத்தை அதிகாரி ஒருவர் பாதி எடுத்துக்கொண்டது தொடர்பாக பாண்டியன் புகார் அளித்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.