சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பதென தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத அதிமுக, நாளேடுகளில் பக்கம் பக்கமாக ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி, கடைசி நாளில் கோயபல்ஸ் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சாதனைகள் என்று எதையும் கூற துணிவற்ற நிலையில் இத்தகைய அவதூறு பிரசாரங்களில் ஈடுபடுவது பாஜ, அதிமுக கூட்டணிக்கு தோல்வி பயம் வெளிப்பட்டு விட்டதையே வெளிப்படுத்துகிறது.
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முதலமைச்சர் எடப்பாடி மீது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை உத்தரவை பெற்று, ஆட்சியில் நீடிப்பவர் எடப்பாடி பழனிசாமி. தடை உத்தரவை நீக்காமல் எடப்பாடி பழனிசாமியை பாதுகாப்பவர் பிரதமர் மோடி.
ஆட்சியில் இருக்கும்போது செய்யாததை மூடிமறைக்க இலவச அறிவிப்பு திட்டங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது இருக்கிறதா. ஆட்சி மாற்றம் உறுதி என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்பட முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.