தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதி முழுவதும் மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அனகாபுத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் அங்கு வேஷ்டி, லுங்கி தறி நெய்யும் இடத்திற்கு சென்று, நெசவாளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது நெசவாளர்களின் பணியை அறிந்துகொள்ளும் வகையில் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெசவு செய்தார். பின்னர் நெசவாளர்களிடம் அவர் பேசுகையில், ‘அதிமுக அரசு நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை செய்துள்ளது. மீண்டும் பல்வேறு திட்டங்கள் நெசவாளர்களுக்கு கிடைத்திட அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் உடனடியாக கிடைத்திட அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வேன்,’ என்றார். பிரச்சாரத்தின் போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.