கொடைக்கானல் : கொடைக்கானலில் குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று புனித வாரத்தின் முதல் நாளாக குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. கொடைக்கானல் வட்டார அதிபர் பங்கு தந்தை எட்வின் சகாயராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு சிஎல்எஸ் புத்தக நிலையத்தில் இருந்து குருத்தோலை பவனி ஆரம்பித்தது.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த பவனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலையுடன் கிறிஸ்தவ தவப்பாடல்களைப் பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்திற்கு ஒரு குழுவினரும், மற்றொரு பிரிவினர் சிஎஸ்ஐ தேவாலயத்திற்கும், கொடைக்கானல் சலேத் அன்னை ஆலயத்திற்கு ஒரு குழுவினரும் குருத்தோலைகளை ஏந்தியபடி சென்றனர். திரு இருதய ஆலயத்தை சென்றடைந்த பின்னர் அங்கு சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றன.