×

குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என முதல்வர் பழனிசாமி உறுதி : மீனவர்களின் எதிர்ப்பால் திட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு!!

நாகர்கோவில் : தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக அவர் இன்று (27ம் தேதி) காலை குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

குமரி மாவட்டத்தில் இருந்து கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. கன்னியாகுமரியில் சரக்குப்பெட்டக துறைமுகம் வருவதாக அவதூறு செய்தியை தேர்தல் காரணமாக பரப்புகிறார்கள். இதை மீனவர்கள் நம்ப வேண்டாம். குமரி மாவட்டத்தில் சரக்குப்பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. தொடக்கத்திலேயே மீனவர்கள் எதிர்த்ததால் இதற்கான சிறப்பு அதிகாரியையும் தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.நாகர்கோவில் நகர மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக அரசுதான். எங்களுக்கு எம்.எல்.ஏ முக்கியம் அல்ல; மக்கள்தான் முக்கியம். நல்ல சாலை, குடிநீர் வசதிகளை கொண்டு வருகிறோம். தேர்தலில் கூறிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

தடையில்லா மின்சாரம் வழங்குகிறோம். அதிகமான தொழிற்சாலை வருது. மத்திய அரசு உதவிகள் செய்கிறது. இன்று தமிழகம் வெற்றிநடைப்போடும் நிலையை அடைந்துள்ளது. மீனவர்களுக்கு காங்கிரீட் வீடுகள். டீசலுக்கான மானியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக வழங்குகிறோம். மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5 ஆயிரம் கொடுப்பதை ₹7,500 வழங்கப்படும்.

மீனவர்கள் பல்வேறு பிரச்னையால் கடன் பெறுகிறார்கள். அவர்களுக்கு உதவ மீனவர்களுக்கென்று தனி வங்கி ஏற்படுத்தப்படும். மீனவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும் தொகை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக வழங்கப்படும்.உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டம் கொண்டுவரப்படும்.

கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறை இடையே ₹20 கோடியில் பாலம் அமைத்து பொதுமக்கள் வசதிக்கு திட்டம் நிறைவேற்றப்படும். படகு நிறுத்த கூடுதல் தளம் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 41 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. குளங்களை தூர்வாரி தண்ணீர் சேமித்து வைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,Palanisamy ,Kumari , Kumari, Cargo Port
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...