கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் ஆயக்குடிபள்ளம் என கிராம பெயர் பலகை வைத்ததால் கிராம மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக சரியான பெயர்பலகையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தல் கிராமம் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் தண்ணீர்பந்தல் கிராமத்தில் ஆயக்குடி பள்ளம் என்ற பெயர் பலகையை வைத்துள்ளனர். இதனைப் பார்த்த தண்ணீர்பந்தல் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தண்ணீர்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கிராம மக்கள் சார்பில் கூறுகையில், தண்ணீர்பந்தல் கிராமம் உள்ள இடத்தில் ஆயக்குடி பள்ளம் என்று எழுதப்பட்ட பெயர் பலகையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வைத்துள்ளனர். உடனடியாக இதனை அகற்றிவிட்டு தண்ணீர்பந்தல் என்று எழுதப்பட்ட பெயர் பலகையை உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.