×

10 சவரன் நகைக்காக பைனான்ஸ் அதிபர் மனைவி கொலை: வீட்டு காவலாளிக்கு வலை

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (52). சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி (47). இவர்களது மகன்  உமேஷ், புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கணவன் மனைவி இருவரும் தணிகாச்சலம் நகரில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு பெயின்ட் அடிப்பதற்காக வந்த நபர், படிப்படியாக குடும்ப நண்பராக பழகினார். அவரிடம், தங்களது வீட்டிற்கு காவலாளி  தேவை. யாராவது தெரிந்தவர் இருந்தால் கூறுங்கள், என பாபுவிடம் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர், பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ராகேஷ் என்பவரை 15 நாட்களுக்கு முன் ரவி வீட்டில் காவலாளியாக பணி அமர்த்தினார். ராகேஷ் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் குடியிருப்பு வளாகத்திலேயே தங்கி வேலை  செய்து வந்தார். அவரது மனைவி குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் ரவி தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதனால், எதிர் வீட்டில் வசிப்பவர்களுக்கு போன் செய்துள்ளார். அவர்களும்  எடுக்காததால் சந்தேகமடைந்த ரவி உடனே வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்துள்ளார்.

அப்போது, அவரது மனைவி கலைவாணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயத்துடன் சடலமாக ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் அலறி துடித்தார். தகவலறிந்து மாதவரம் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில், கலைவாணியின் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி மாயமானதும், வீட்டு காவலாளி ராகேஷை தேடியபோது அவர் குடும்பத்துடன் தலைமறைவானதும் தெரிந்தது. இதனால், அவர், கலைவாணியை கொலை செய்துவிட்டு  நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : 10 Accounting Chancellor's Wife Killed for Shaving Jewelry: Web for Home Guard
× RELATED கொள்ளிடத்தில் வாகன தணிக்கையின் போது...