கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நேற்று பயங்கர வன்முறை ஏற்பட்டதை அடுத்து அவம்பாவிதங்களை தவிர்க்க அங்கு காவல்படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வரும் 27ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் புருலியா, மேற்கு மிட்னாபூர், பங்குரா, கிழக்கு மிட்னாபூர், ஜார்கிராம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகள் வாக்குப்பதிவை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்த சுவேந்து-வின் பொதுக்கூட்டம் நேற்று மாலை நந்திகிராமில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரசினர் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த பாரதிய ஜனதா தொண்டர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரசிஸ் தொண்டர்களே காரணம் என குற்றம்சாட்டினார்.
மோதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நந்திகிராமில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து நந்திகிராம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பாரதிய ஜனதா கட்சியினர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வேண்டுமென்றே வன்முறையை தூண்டிவிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரசிஸ் புகார் அளித்திருக்கிறது. நந்திகிராம் மோதல்களுக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.