சென்னை: 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டதால் எம்டிசி ஊழியர்களின் வங்கி கணக்கு விவரங்களை மார்ச் 23க்குள் பெற எம்டிசி தலைமை அலுவலகம் சார்பில் அனைத்து உதவி மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு நான்கு வங்கிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், பஞ்சாப் நேசனல் வங்கியுடன் ஓரியண்டல் வணிக வங்கி மற்றும் இந்தியன் ஐக்கிய வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கியும். கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட காரணத்தினால், தொழிலாளர்கள் சம்பளம் வாங்கும் வங்கி கிளைகளில் ஐ.எஃப்.எஸ்.சி கோடு மாற்றப்பட்டுள்ளது. மேலும், வங்கி சேமிப்பு கணக்கு எண் நம்பரும் மாற்றப்பட்டிருக்கலாம்.
இதன் காரணமாக பொதுத்துறை வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வங்கி கிளை மாற்றப்பட்ட ஐஎஃப்எஸ்சி கோடு வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை உடனடியாக அனைத்து பனிமனை கிளை மேலாளர்களும் மற்றும் அனைத்து தலைமையக பிரிவு உதவி மேலாளர்களும் தொழிலாளர்களிடமிருந்து விவரங்களை பெற்று வரும் 23ம் தேதிக்குள் கணினி கோப்பாக மற்றும் கடித நகலாக ஒப்புதல் பெற்று உதவி மேலாளர், மத்திய சம்பள பட்டியல் பிரிவிற்கு தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.