ஹைதராபாத்: அமராவதி நில முறைகேடு வழக்கில், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கும் ஆந்திர மாநிலத்தின் குற்ற புலனாய்வுத்துறை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க திட்டமிட்டார். தலைநகர் அமராவதியை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தினார். ஆனால் கடந்த ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தவுடன் அமராவதி திட்டத்தை ரத்து செய்து புதிதாக 3 தலைநகரங்களை அமைக்க திட்டமிட்டார்.
புதிய தலைநகரை உருவாக்க நிலம் கையகப்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சந்திரபாபு நாயுடுக்கு சிஐடி நோட்டீஸ் வழங்கியுள்ளது. விசாரணைக்காக சிஐடி அலுவலகம் வருமாறு ஹைதராபாத்தில் உள்ள சந்திரபாபு வீட்டிற்கு சென்று சிஐடி-யின் இரண்டு சிறப்பு குழு நோட்டீஸ் வழங்கியது.