சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை தமிழகம் வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் சார்பில், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறியதாவது; இதுவரை 65 கம்பெனி துணை ராணுவப்படை தமிழகம் வந்துள்ளது என்றும், வரும் 19ஆம் தேதி காவல்துறை பார்வையாளர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் தமிழகம் வரவுள்ளதாகவும் கூறினார்.
மேலும், வேட்பாளர்கள் ஆன்-லைன் மூலம் வேட்புமனு விண்ணப்பத்தை பெறலாம், அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். கல்லூரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தது தொடர்பான புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் சத்தியபிரதா சாகு கூறினார்.