சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில், பொதுக்கூட்டம் நேற்று காலை கொளத்தூரில் நடந்தது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது: என்னிடம் பேரம் பேசியவர்களிடம் சொன்னேன், கமல் விற்பனைக்கு அல்ல என்று. என்னை பாஜ ‘பி’ டீம் என்று சொல்கிறார்கள். பகுத்தறிவுவாதியாக இருந்த என்மேல் காவி சாயம் புசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இருந்து நீக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பாஜ திட்டம். ‘பி’ டீம் யார் என்பதை காங்கிரஸ் புரிந்துகொள்ள வேண்டும்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஒப்புதல் அளிக்க கவர்னர் எடுத்துக் கொண்ட நாட்கள் எத்தனை. 7 பேர் விடுதலைக்கு அவர் எடுத்துக் கொண்டது எத்தனை நாட்கள். விடுதலைக்கு பிறகு ரூ.1 லட்சம் கோடி கடனில் இருந்த நாட்டை ரூ.5 லட்சம் கோடியாக மாற்றியது இந்த கொள்ளையர்கள். ஊடகம் நமக்கு பலம் அளிக்க மறுக்கிறது. குடும்ப அரசியலை நானும் செய்கிறேன். ஏழரை கோடி மக்களுக்கான குடும்ப அரசியல் நான் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.