×

சுயமரியாதை இல்லை!: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 600 பேர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் இணைந்தனர்..!!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட 600 பேர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திமுக-வில் தங்களை முறைப்படி இணைத்துக்கொண்டனர். திரு.வி.க நகர் பெருங்குடி மாவட்ட செயலாளர், கோவை தொண்டாமுத்தூர் பொதுச்செயலாளர், ஆர்.கே.நகர் தொகுதி செயலாளர் உள்ளிட்ட பலர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அனைவரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.

சுயமரியாதை கேள்விக்குறியானதால் கட்சி மாறியதாக திமுக-வில் இணைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியில் ஜனநாயகம் இல்லை என விலகியவர்கள் குற்றம்சாட்டியள்ளனர். நாம் தமிழர் கட்சியில் குறைந்தபட்ச கருத்து தெரிவிக்கவும் அனுபதிப்பதில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர். தமிழகத்தை ஆள தகுதியான கட்சி திமுக என்பதாலேயே இதில் தங்களை இணைத்துக்கொண்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த ராஜீவ்காந்தி, கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். அவருடைய ஏற்பாட்டின் பேரிலேயே இந்த இணைப்பு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : DMK ,Tamil Party ,MK Stalin , We Tamil Party, 600 people, DMK, joined
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...