மைசூரு: விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் பதவி விலக வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை எதிர்த்து மைசூருவில் கன்னட அமைப்பினர் மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை வைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பின் தலைவர் எஸ். பாலகிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: `` மத்திய, மாநில அரசுகளின் தவறான செயல்களால் நாட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தினமும் உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறியதால் அத்தியவசிய பொருட்களின் விலை கூடுதலாக ஏற்பட்டுள்ளது. இது நடுதர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பட்ஜெட் தேர்தலை கவனத்தில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும் மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது’’ என்றார்.