சென்னை: சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தாம்பரம் தாசில்தாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம் ஏரியில் குப்பை கொட்டப்பட்டு எரிக்கப்படுவது, தாம்பரம் நகராட்சியின் கழிவுநீர் விடப்படுவது, ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தாம்பரம் தாசில்தாருக்கு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொதுப்பணித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அப்பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆக்கிரமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், 2019ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.