டெல்லி: டுவிட்டரின் விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் நீக்கப்படும் என டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு, டுவிட்டர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை என கூறப்பட்டது.
டுவிட்டர் நிறுவனம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது உரையாடலை மேம்படுத்துதல் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிறது என டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேட்டியளித்தார். பொதுவாக டுவிட்டர் கணக்குகளையோ, பதிவுகளையோ நீக்குவதற்கு அரசிடமிருந்து சட்ட ரீதியான உத்தரவு வரும்போது, டுவிட்டரின் கொள்கை விதிகள் மற்றும் உள்நாட்டுச் சட்டம் ஆகிய இரண்டு அம்சங்களின் கீழ் மதிப்பாய்வு செய்கிறோம் என கூறினார். உள்ளடக்கம் டுவிட்டர் விதிகளை மீறுவதாக இல்லாவிட்டாலும் அதிகார வரம்பில் அது சட்டவிரோதமானது என்று தீர்மானிக்கப்பட்டால் அப்போதும் நீக்கப்படும் என தெரிவித்தார்.