பொள்ளாச்சி :பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள தேவம்பாடி வலசு கிராமத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதால், அப்பகுதியின் ஒரு பகுதியில் பெண்களுக்கென தனி சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015ம் ஆணடு பாராளுமன்ற உறுப்பினர் நிதியின்கீழ் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகமானது, சில ஆண்டுகளே பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், தண்ணீர் வினியோகம் முறையாக இல்லாமலும், பராமரிக்காமலும் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, அந்த சுகாதார வளாகத்தை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்துள்ளது. கதவுகள் பழுதாகியும் உள்ளது.
அடிக்கடி விஷ சந்துக்கள் நடமாடும் இடமாக மாறுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.