பாபநாசம்: பாபநாசம் வடக்கு தெருவில் பழமையான கட்டிடத்தில் இயங்கும் கால்நடை மருந்தகத்தை தரம் உயர்த்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் வடக்குத் தெருவில் கால் நடை மருந்தகம் உள்ளது. 1956ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கால்நடை மருந்தகத்தில் பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பிராணிகள் வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை இங்குதான் சிகிச்சைக்கென அழைத்து வருகின்றனர். இங்கு மாட்டிற்கு சினை ஊசி, பொது சிகிச்சை வழங்கப்படுகிறது. தாலுகா தலைநகராக இருந்தும் தற்போது உதவி கால்நடை மருத்துவர் கூடுதல் பொறுப்பாகத்தான் இங்கு வந்துச் செல்கிறார்.
இங்கு டாக்டர் உள்பட ஆய்வாளர், பணியாளர்கள் உள்பட 4 பேர் பணியில் உள்ளனர். இந்நிலையில் இந்த கட்டிடம் சிதிலமடைந்து ஆங்காங்கே சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் பணியாளர்கள் அச்சத்துடன் பணியில் உள்ளனர். மழைகாலங்களில் மேற்கூரை வழியாக மழைநீர் கசிவதுடன், இங்குள்ள பதிவேடுகளும் மழையில் நனைகின்றன. இந்த கட்டிடத்தின் மேற் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. எனவே பழுதடைந்த இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து விட்டு புதிதாக கட்டிக்கொடுக்க வேண்டும். இந்த மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி கால் நடை மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும் என பாபநாசம் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.