சென்னை: சென்னையில் 444 மரணங்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 36 மாவட்டங்களிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளதா என்று சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் இறப்பு காரணம் தொடர்பாக அறிக்கை அளிக்க மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தயார் செய்த அறிக்கையில் 199 மரணங்கள் மறைக்கப்பட்டு இருப்பது முதல் கட்டமாக கண்டறியப்பட்டது.
இதற்கிடையில் சென்னையில் கொரோனா மரணங்கள் விடுபட்டது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது சென்னையில் மார்ச் முதல் ஜூன் 10ம் வரை நடைபெற்ற மரணம் மற்றும் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின் படி விடுபட்ட 444 மரணங்கள் கொரோனா மரணங்களின் பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த 444 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 30ம் தேதி தமிழகத்தில் 1,201 பேரும் சென்னையில் 888 பேரும், பிற மாவட்டங்களில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். அதைப்போன்று ஜூலை 21ம் தேதி தமிழகத்தில் 2,626 பேரும், சென்னையில் 1,475 பேரும் பிற மாவட்டங்களில் 1,151 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜூலை 22ம் தேதி தமிழகத்தில் 2700 பேரும், சென்னையில் 1,495 பேரும், அதனுடன் ஜூன் 10ம் தேதி வரை மறைக்கப்பட்ட மரணங்கள் 444 பேரை சேர்த்து 1,939 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிற மாவட்டங்களில் 1,205 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மாவட்டம் சென்னையில் மட்டும் 444 மரணங்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 36 மாவட்டங்களில் இதைப்போன்று எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. மேலும் சென்னையை அடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டில் 210, திருவள்ளூரில் 180, காஞ்சிபுரம் 74, மதுரையில் 174, ராமநாதபுரத்தில் 53 என சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு உயிரிழப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் சென்னையை போன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைத்திருக்க கூடும். எனவே சென்னையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தியது போன்று மற்ற மாவட்டங்களிலும் மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாவட்டம் சென்னையில் மட்டும் 444 மரணங்கள் மறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 36 மாவட்டங்களில் இதைப்போன்று எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.