ஷிவமொக்கா: எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு பின் மாணவிகள் தங்கள் படிப்பை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். ஷிவமொக்காவில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு நடத்தப்படும் ஸ்மார்ட் கிளாஸ் குறித்து கேட்டறிந்தார். பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பிறகு உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் சுரேஷ்குமார், அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ``கொரோனா தொற்று காரணமாக சுமார் ஒன்பது மாதங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் விடுமுறை பற்றி சிந்திக்க வேண்டாம்.
நீங்கள் எல்லாம் நல்ல பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். நன்றாக படித்து எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி படிப்பு முடிந்தபின் மாணவ, மாணவிகள் படிப்பை நிறுத்திவிடாமல் மேற்படிப்பை தொடர வேண்டும். மாணவிகளின் படிப்பை தொடர பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்ற அவர் அங்கிருந்த மாணவர்களிடம் சத்தியம் வாங்கி கொண்டார்’’. இந்த ஆய்வின் போது மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.