பெங்களூரு: மஜதவுக்கு வேறு கட்சியுடன் இணைய வேண்டிய அவசியம் வரவில்லை என்று மஜத மாநில இளைஞர் அணி தலைவர் நிகில்குமாரசாமி தெரிவித்தார். பெங்களூருவில் அமைந்துள்ள மஜத தலைமை அலுவலகமான ஜே.பி.பவனில் மஜத இளைஞர், மாணவர் அணியின் மாவட்ட, தாலுகா அளவிலான தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில இளைஞர் அணி தலைவர் நிகில்குமாரசாமி பேசியதாவது: மாநிலத்தில் மஜத கட்சியை சொந்த பலத்துடன் அதிகாரத்துக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான செயல்வீரர்கள் மஜதவை நம்பியுள்ளனர். அவர்களின் ஆதரவால் கட்சி பலப்படுத்தப்படும். 2021-ம் ஆண்டு மஜத இளைஞர் அணி வருடமாக இருக்கும். தற்போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 30 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மஜத கட்சியை வேறு கட்சியுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்படாது.
இது தொடர்பாக கட்சியின் தலைவர் எச்.டி.தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.தற்போது கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளது. அதே போல் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. இத்துடன் 2023-ம் ஆண்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏற்கனவே எச்.டி.குமாரசாமி பதில் கொடுத்துள்ளார். அதே போல் மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவும், நானும் இணைந்து ஒரு இளைஞர் படையை உருவாக்க முயற்சி செய்வோம்’’ என்றார். கூட்டத்தில் எச்.டி.குமாரசாமி, கட்சி மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி, பசவராஜ்ஹொரட்டி, பண்டேப்பாகாசம்பூர், மாஜி எம்.எல்.ஏ. கோணரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.