புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்காக சிங்கு எல்லையில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா தெரிவித்தார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு உதவிகள் குவிந்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, விவசாயிகளுக்காக சிங்கு எல்லையில் இலவச வைபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், எம்எல்ஏவுமான ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ராகவ் சதா கூறியதாவது: இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் வைபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைத்து தர கெஜ்ரிவால் அறிவுறுத்தலின் பேரில் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சிங்கு எல்லையில் ஹாட்ஸ்பாட்டுகள் அமைப்பதற்கு சில இடங்களை தேர்வு செய்துள்ளோம். மேலும், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை வந்தால் மேற்கொண்டும் ஹாட்ஸ்பாட்டுகள் அமைத்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.