வேலூர்: பாமகவின் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக வேலூரில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் பாமக சார்பில், வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 30ம் தேதி அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் முன்பும் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்துவதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசு பணிகளில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்து பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர கிருஷ்ணகிரியில் ஜி.கே.மணி அளித்த பேட்டியில். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அதிமுக அரசின் நிலைப்பாட்டை பொறுத்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கூட்டணி தொடர்பான முடிவை, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்றார்.