டெல்லி: வரி வசூல் பிரச்சனையில் பிரிட்டனை சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு மத்திய அரசுக்கு சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தனது பெரும்பான்மையான இந்திய வணிகத்தை வேதாந்தா நிறுவனத்திற்கு கைமாற்றியது. அப்போது வரி வசூல் பிரச்னையை காரணம் காட்டி ஒரு பகுதி பங்கு விற்பனையை வருமானவரித்துறை தடுத்துவிட்டது. இதனை தொடர்ந்து கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்தது. மேலும் கெய்ர்ன் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய ஈவு தொகை 1140 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கெய்ர்ன் நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் நியமன உறுப்பினர் உட்பட 3 பேர் அடங்கிய தீர்ப்பாயம், இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் இந்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ள தீர்ப்பாயம், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, இழப்பீடு என மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாயை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் பிரிட்டனை சேர்ந்த வோடாஃபோன் குழுமம் இந்தியாவிற்கு எதிரான 22 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரி குறித்த வழக்கில் வெற்றி பெற்றது. தற்போது கெய்ர்ன் நிறுவன வழக்கிலும் மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது பின்னடைவாக கருதப்படுகிறது.