தங்கவயல்: தங்கவயல் நகரசபை கமிஷனர் சர்வர் மெர்ச்சன்ட்டிடம் எது குறித்து கேட்டாலும் தனக்கு தெரியாது என்கிறார் என்று தங்கவயல் தாசில்தார் சுஜாதா புகார் தெரிவித்துள்ளார். தங்கவயல் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. கோரமாண்டல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் பள்ளியில் நடந்த இந்த பயிற்சி முகாமில் தாசில்தார் சுஜாதா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசும் போது, பஞ்சாயத்து தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி ஸ்கூல் ஆப் மைன்ஸ் பள்ளியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையும் இங்கு தான் நடைபெற உள்ளது.
ஆனால் இந்த ஸ்கூல் ஆப் மைன்ஸ் வளாகத்தை நகரசபை கமிஷனரிடம் துப்புரவு படுத்த கேட்டும், அதை செய்ய வில்லை. பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அதிகாரிகளுக்கு ஒரு டேங்கர் குடிநீர் ஏற்பாடு செய்து தர கேட்டும் குடிநீர் தரவில்லை. பஞ்சாயத்து தேர்தல் பணிகளுக்கான பொறுப்பு அவருக்கும் உள்ளது. ஆனால் நகரசபை கமிஷனரிடம் எதை கேட்டாலும், எனக்கு தெரியாது, தெரியாது என்கிறார். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்க உள்ளேன் என்றார்.