சோழவந்தான்: சோழவந்தான் அருகே சமணர் மலையில் நேற்று தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது மலையூர். இங்குள்ள மலையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சமண முனிவர்களின் படுகைகள், சுணைகள் மற்றும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுகள் உள்ளன. எனவே இந்த மலையை புராதன சின்னமான அறிவித்து பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த மலையில் நேற்று தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், உதவி பொறியாளர் ஒலி மாலிக், உசிலம்பட்டி ஆர்டிஓ ராஜ்குமார், தாசில்தார் விஜயலெட்சுமி மற்றும் ஆர்ஐ உமா மகேஸ்வரி, விஏஓ காமராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இங்குள்ள குகைகள், படுகைகள், கல்வெட்டுகள், சுணைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், “பாரம்பரியமான இம்மலையை விரைவில் பாதுகாப்பு சின்னமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்” என்றனர்.