சென்னை: பைக் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை முழுவதும் அனைத்து போக்குவரத்து சிக்னல்கள் முன்பு நேற்று போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றம், பைக் ஓட்டுபவர்கள் மட்மில்லாமல், பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது. இதனால் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவுப்படி நேற்று முன்தினம் முதல் பைக் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை முழுவதும் உள்ள 12 காவல் துணை கமிஷனர்கள் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, திருவல்லிக்கேணி துணை கமிஷனர் கிருஷ்ணராஜ் நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலையில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற நபர்களிடம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதைதொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் நேற்று போக்குவரத்து போலீசாருடன் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து அனைத்து சிக்னல்களிலும் பைக்கில் பின்னால் ஹெல்மெட் இல்லாமல் வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அனைவருக்கும் அரைமணி நேரம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.