×

அழகாபுரம் பெரிய ஏரி வடிகால் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றகோரி வயலில் தேங்கிய தண்ணீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு, கரும்பு, நெல், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ளனர். புரெவி புயல் வலுவிழந்து பாம்பன் அருகே மையம் கொண்டதால் அரியலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓலையூர் அருகே உள்ள அழகாபுரம் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரி நீர் வெளியேற வேண்டிய வடிகால் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது பெய்த மழையால் நீரானது பெரிய ஏரியில் இருந்து வடிகால் வசதி இல்லாததால் ஓலையூர் பகுதி விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதனால் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு, கரும்பு, உளுந்து, முந்திரி, நெல் வயல்களில் 5 நாட்களாக இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏரிக்கான வடிகால் குறித்து கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்தாண்டும் வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் நாசம் ஆகிவிட்டது. இதனால் வடிகால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை காக்க வலியுறுத்தி நீர் சூழ்ந்துள்ள தங்களது வயல்களில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் கிடைத்ததும் ஓலையூர் கிராம நிர்வாக அதிகாரி கோட்டி சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வடிகால் ஓடையை சீரமைத்து இந்தாண்டு நடந்ததுபோல் மீண்டும் விவசாய நிலத்துக்குள் வெள்ளநீர் வராதபடி ஆவணம் செய்ய வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் கோட்டி தகவல் தெரிவித்தார். இதைதொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், ஒன்றிய பொறியாளர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் அழகாபுரம் ஊராட்சி நிர்வாகமும், ஓலையூர் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து அழகாபுரம் பெரிய ஏரிக்கான வடிகால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை முதல் மாலை 6 மணி வரை நடந்த காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Alagapuram Farmers ,protest ,Great Lakes Drainage Stream , Farmers
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...