ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் சாலை, கடந்த 2 நாட்களாக பெய்த மழையில், பல்லாங்குழியாக மாறிவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கபடுகின்றன.சுங்குவார்சத்திரத்தில் இருந்து செல்லும் பஸ்கள், சுங்குவார்சத்திரம் - வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் - திருவள்ளூர், சுங்குவார்சத்திரம் - காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சாலைகளை பிரதான சாலைகளாக பயன்படுத்துகின்றன.
மேற்கண்ட 4 சாலைகளும் 100 அடி அகலம் கொண்டது. தற்போது சுங்குவார்சத்திரம் பஜாரில் இருந்து செல்லும் இந்த சாலைகளில் பெரிய அளவில் பள்ளங்கள் தோன்றியுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.மேலும் கடந்த 2 நாட்களாக பெய்த கடும் மழையால், இச்சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதையொட்டி வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், பல்லாங்குழியான சுங்குவார்சத்திரம் பஜார் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.