×

நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து அதிகாலை வரை இருந்ததால் பரபரப்பு நடிகை கவுதமி வீட்டிற்குள் புகுந்து ரகளை: போதையில் இருந்த வாலிபர் கைது

சென்னை: பிரபல நடிகை கவுதமி வீட்டிற்குள் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து அதிகாலை வரை நோட்டமிட்ட பெயின்டரை போலீசார்  கைது செய்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளே புகுந்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி (52). இவர், சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் தனது மகளுடன்  தனியாக வசித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதில் இருந்து தற்போது ஒதுங்கி இருந்தாலும், சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பாஜவில் நடிகை  கவுதமி இணைந்தார். சினிமா நட்சத்திரம் என்பதால் கவுதமிக்கு பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடிகை கவுதமி வீட்டில் வழக்கம் போல் நேற்று அதிகாலை எழுந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் அங்கும் இங்கும்  நோட்டமிட்டபடி இருந்துள்ளார். இதை பார்த்த நடிகை கவுதமி அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் மர்ம நபரை பிடித்தனர்.  அப்போது அனைவரையும் மர்ம நபர் போதையில் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து கவுதமி தரப்பில் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசார்,  பிடிபட்ட  மர்ம நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, சென்னை பாலவாக்கம் குப்பம் விநாயகர் தெருவை சேர்ந்த பாண்டியன்(23) என தெரியவந்தது. இவர் பெயின்டராக வேலை செய்து  வருகிறார். இவர், குடிபோதையில் நடிகை கவுதமி வீட்டிற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்ததும். அதிகாலை வரை  உள்ளே இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து பெயின்டர் பாண்டியன் மீது ஐபிசி 380, 511 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இருந்தாலும், கவுதமி பிரபல நடிகை என்பதால், கைது செய்யப்பட்ட பாண்டியனிடம் நள்ளிரவில் வீட்டிற்குள் செல்ல என்ன காரணம். இதற்கு முன்பு  நடிகை வீட்டிற்குள் வந்து சென்றாரா. சுவர் ஏறி குதித்து உள்ளே வர நோக்கம் என்ன அல்லது நடிகை வீட்டில் நகை மற்றும் பணத்தை  கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளே நுழைந்தாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரபல நடிகை கவுதமி வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் புகுந்து அதிகாலை வரை இருந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.



Tags : Gautami ,house , Excitement as we climbed the wall at midnight and stayed up until early morning Actress Gautami broke into a house and arrested a drunken youth
× RELATED 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு...